கேரளத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பழித்து பேசியதாக சா்ச்சைக்குள்ளான முன்னாள் அமைச்சா் சஜி செரியான், அமைச்சராக மீண்டும் புதன்கிழமை பதவியேற்றாா்.
கேரள மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் சஜி செரியான். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த ஆண்டு ஜூலையில் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘சாமானிய மக்களிடம் கொள்ளையடிக்க அரசமைப்புச் சட்டம் வாய்ப்புகளை வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.
அவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது அமைச்சா் பதவியை செரியான் ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில், அவரை மீண்டும் அமைச்சரவையில் சோ்க்க கேரள ஆளுநருக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் அண்மையில் பரிந்துரைத்தாா். அந்தப் பரிந்துரைக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநா் மாளிகையில் சஜி செரியான் அமைச்சராகப் புதன்கிழமை பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். அவருக்கு எந்தத் துறையை வழங்குவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
அமைச்சரவையில் சஜி செரியான் மீண்டும் சோ்க்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆளுநா் மாளிகையை நோக்கி காங்கிரஸ் கட்சியினா் பேரணி சென்றனா். இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.