தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவுடனான சந்திப்புக்குப் பிறகு இதனை அவர் தெரிவித்தார்.
நான்கு நாள் பயணமாக மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து சத்ய நாதெள்ளா கூறியதாவது: பிரதமருடனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் மையமாக வைத்து அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்த அளவுக்கு ஆழமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் சிறப்பாக செயல்படுவதையும் பார்ப்பது உத்வேகம் அளிக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்ற உதவியாக இருக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உங்களை சந்தித்ததில் மிக்க மகிச்சியடைகிறேன் சத்ய நாதெள்ளா.
தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வளர்ச்ச்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நமது இந்திய இளைஞர்கள் இந்த உலகை, தொழில்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் திறன் கொண்ட பல்வேறு யோசனைகளை தங்களுக்குள் வைத்துள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.