வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை உறைபனிக்கு கீழ் பதிவாகியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் கடும் குளிரில் தத்தளித்து வருவதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை சுருவில் 0.0 டிகிரி செல்சியஸும், பிலானியில் 0.6 டிகிரி செல்சியஸும், பதிவாகியுள்ளது.
மேலும், சிகாரில் 1.0 டிகிரி, கரௌலியில் 1.2 டிகிரி, அன்டாவில் 1.6 டிகிரி, பனஸ்தலியில் 1.7 டிகிரி, பிகானரில் 2.0 டிகிரியும், அல்வாரில் 2.4 டிகிரியும், தோல்பூரில் 2.6 டிகிரியும், நாகூரில் 3.3 டிகிரியும், டோங்கில் 3.4 டிகிரியும் பதிவாகியுள்ளது.
மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19.8 டிகிரியும், குறைந்தபட்சமாக 4.4 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவானது.
வரும் நாள்களில் கடுமையான குளிர் அலை, அடர்ந்த மூடுபனி மற்றும் குளிரிலிருந்து மக்கள் விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.