பெங்களூரு: வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மாணவர், எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர் இல்லை என்று பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் இன்று (ஜன. 10) தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகத்தின் முதல்வர் இந்திரா ஜெயகிருஷ்ணன் தெரிவித்தாவது:
பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமி ஃபார் லேர்னிங் என்ற எங்கள் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதாக மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு தெரிவித்த மாணவர், எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர் இல்லை என்றார்.
மாணவனிடம் இது தொடர்பாக, தொடர்ந்து விசாரித்தபோது அவன் வேடிக்கைக்காக இதைச் செய்ததாகக் தெரிவித்துள்ளான். விசாரணையில் அவன் பள்ளியின் மின்னஞ்சல் ஐடியை, இணையத்தில் இருந்து எடுத்ததாக காவலர்களிடம் தெரிவித்துள்ளான்.
பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட மிரட்டலால் பதற்றம் நிலவியது.
நான்கு ஜெலட்டின் குச்சிகள் பள்ளியின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதிய உணவு நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,000 பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து அவர்களை பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் நாய்ப்படையினர் பள்ளி வளாகத்தை சோதனை செய்து பின்னர் அதை புரளி என்றனர்.