மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோக சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன் தினம் (ஜனவரி 18) நடந்துள்ளது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்டவர் வாசுதேவ் பட்லே என்ற வணிகர் ஆவார். வசதியான பின்புலம் கொண்ட அவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலங்கள் உள்ளன. புதன்கிழமை மாலை அவர் வெயின்கங்கா நதியின் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் வியாழக்கிழமை (ஜனவரி 19) காலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவரது மனைவிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த விஷயம் தெரிந்த சிறிது நேரத்தில் வாசுதேவ் வெளியே புறப்பட்டுள்ளார். எங்கு செல்கிறீர்கள் என உறவினர்கள் கேட்டதற்கு மருந்து வாங்க செல்கிறேன் என கூறிச் சென்ற அவர் இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார். பட்லேவின் உடன் பிறந்தவர்கள் 4 பேர். அதில் அவர் மட்டுமே ஆண் குழந்தை. புதிதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் உட்பட அவருக்கு 4 பெண் குழந்தைகள். அவர்களில் மூத்த குழந்தைகளுக்கு ஒருவருக்கு 6 வயது, மற்றொருவருக்கு 4 வயது ஆகும் என்றனர்.
இந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.