ஹஜிபூர்: பிகார் மாநிலம் ஹாஜிபூர் பகுதியில் இயங்கி வரும் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களை, வீரத்துடன் எதிர்கொண்டு கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய இரண்டு பெண் தலைமைக் காவலர்களை காவல்துறையினர் கொண்டாடி வருகிறார்கள்.
ஜூஹி குமாரி, சாந்தி குமாரி ஆகிய இரண்டு தலைமைக் காவலர்களும், வங்கியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைவதைப் பார்த்ததுமே, ஒரு வினாடி கூட யோசிக்காமல், இரண்டு தலைமைக் காவலர்களும் தங்களது துப்பாக்கிகளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி குறிவைத்து சுட்டனர்.
இதில் ஒரு கொள்ளையன்மட்டும் தலைமைக் காவலர் ஒருவரை பிடிக்க முயன்றார். உடனடியாக தலைமைக் காவலர்கள் கொள்ளையர்களுடன் சண்டையிட்டனர். இவர்களது தாக்குதலுக்கு பயந்து, கொள்ளையர்கள் வங்கியிலிருந்து தப்பியோடிவிட்டனர்.
தங்களது வீரச் செயலுக்காக, தலைமைக் காவலர்களுக்கு, பிகார் காவல்துறை விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது.
தப்பியோடிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். காவல்துறை மூத்த அதிகாரிகள், தலைமைக் காவலர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.