புது தில்லி: 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்பட விடியோக்களையும் அது தொடர்பான டிவிட்டர் பதிவுகளையும் முடக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கும், அந்த விடியோவை இணைத்து வெளியிடப்பட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட டிவிட்டர் பதிவுகளை நீக்குமாறு டிவிட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. குஜராத் கலவர பிபிசி ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம்
சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்தை மத்திய உள்துறை அமைச்சக, வெளிவிவகாரத் துறை அமைச்சக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த ஆவணப்படம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மையின் மீது அவதூறு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில், யூடியூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2021ன் கீழ் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. யூடியூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், அந்த ஆவணப்படம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘வெறும் பிரசார நோக்கத்துக்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெற்றுக் கருத்துகளை மட்டுமே அந்த ஆணவப்படம் பரப்புகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படம் பிபிசி பக்கத்தில் இணைக்கப்படவில்லை. ஆனால், சில யூடியூப் சேனல்கள், இந்த விடியோவை பதிவேற்றம் செய்துள்ளது. எனவே, யூடியூப் சேனல்களில் இந்த விடியோக்களை நீக்கவும், இந்த விடியோ இணைப்புகளைக் கொண்டிருக்கும் டிவிட்டர் பதிவுகளை நீக்குமாறு டிவிட்டர் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.