

புதுதில்லி: திருமணமாகாத 20 வயது மாணவியின் 29 வார கர்ப்பத்தை பாதுகாப்பாக கலைக்க முடியுமா என்பதை கண்டறிய மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணமாகாத 20 வயது பி.டெக் மாணவியின் மருத்துவப் பரிசோதனையின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையைக் (எய்ம்ஸ்) உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை (ஏஎஸ்ஜி) கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் மாணவியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மாணவி காஜியாபாத்தில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதாகவும், தோராயமாக 29 வாரங்கள் உள்ள தேவையற்ற கர்ப்பத்தை அந்த பெண் கலைக்க விரும்புவதாக அவர் கூறினார்.
இதையடுத்து அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவக் குழு மதிப்பீடு செய்ய உத்தரவிடுவது சரியானது என்று கருதுகிறோம். மாணவியின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பதை ஆராய்வதற்கு மருத்துவக் குழுவை அமைக்க எய்ம்ஸ் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எய்ம்ஸ் இயக்குநரிடம் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எய்ம்ஸ் தரப்பிலிருந்து வரும் அறிக்கையை ஆய்வு செய்து ஜனவரி 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.