திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் லட்டு வழங்கும் மையத்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. லட்டு வழங்கும் வளாகத்திலுள்ள 36வது கவுன்டரில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருப்பதி லட்டை பெற்றுச்செல்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி லட்டு வளாகத்திலுள்ள 36வது கவுன்டரில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு வாங்க பலர் வரிசையில் காத்திருக்கும் நிலையில், அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியிலும் லட்டு கவுன்டரில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.