உலகிலேயே மிகப் பணக்கார பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி மட்டுமே

பிச்சைக்காரன் படம் பாணியில், மும்பையில் ஒரு நிஜ பணக்கார பிச்சைக்காரர் வசித்து வரும் செய்திதான் இன்று ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
உலகிலேயே மிகப் பணக்கார பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி மட்டுமே


மும்பை: பிச்சைக்காரன் படம் பாணியில், மும்பையில் ஒரு நிஜ பணக்கார பிச்சைக்காரர் வசித்து வரும் செய்திதான் இன்று ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மும்பையிலிருந்து வரும் தகவல்கள் கூறுவது என்னவென்றால், பாரத் ஜெயின் எனற் உலகிலேயே மிகப் பணக்கார பிச்சைக்காரர் என்று அறியப்படுபவர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சாலைகளில் தற்போதும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்.

திருமணமாகி, மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர், தந்தை என கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் பாரத் ஜெயின், குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் நின்றுவிட்டார்.

அதே நிதிநிலைமை அவரை பிச்சைக்காரராகவும் மாற்றியது. ஆனால், அந்த பிச்சைத் தொழில் அவரை பணக்காரராக உயர்த்தியிருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். மாதம் ஒன்றுக்கு அவர் பிச்சையெடுப்பதன் மூலம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.

இந்த பணத்தைக் கொண்டு அவர் குடும்பச் செலவுக்குப் போக இரண்டு சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறார். அதன் மூலமும் மாத வருவாய் ஈட்டி வருகிறார். இவையெல்லாம் உங்களுக்கு லேசாக நெஞ்சுவலியை ஏற்படுத்தினால், இந்தச் செய்தியை மேற்கொண்டு படிக்காமல் இருப்பதே சாலச்சிறந்தது. ஏனென்றால், அவருக்கு மும்பையில் ரூ.1.2 கோடி மதிப்பில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு சொந்தமாக உள்ளதாம். 

இவர் எப்போதுமே மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில்நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டுமே பிச்சையெடுப்பாராம்.

ஆரம்பத்தில் பிச்சையெடுத்ததில் ஆச்சரியமில்லை என்றாலும், கோடீஸ்வரர் ஆன போதும், இந்தத் தொழிலை அவர் விடாமல் தொடர்வதுதான் பலருக்கும் ஆச்சரியம்.

சில நூறுகளுக்காக நாள் முழுவதும் பல தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஒரு நாளில் அவர் ரூ.2000 முதல் ரூ.2500 வரை பிச்சையெடுப்பதன் மூலம் ஈட்டிவிடுவாராம்.. இந்திய மக்களின் கருணை உள்ளத்தின் அளவை நினைத்தால் பெருமையாக இருக்கலாம்.

தற்போது ஒரு சிறிய வீட்டில் ஜெயின் குடும்பம் வசித்து வருகிறது. அவரது பிள்ளைகள் மிகப்பெரிய பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். 

சமூக ஊடகங்கள் முழுக்க இந்த பிச்சைக்காரரைப் பற்றிய செய்திதான். சொற்ப வருமானத்துக்காக, வாழ்நாள் முழுவதும்ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் ஏராளமான தொழிலாளிகள், இந்த பிச்சைக்காரரைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்து தங்களது ஆற்றாமையை ஆற்றிக் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com