புது தில்லி: மகாராஷ்டிர அரசு மூலம், தாராவி மேம்பாட்டு திட்டம், அதானிக்கு மோடியால் அளிக்கப்பட்ட பரிசு என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தாராவி குடிசைப் பகுதியை மாற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை அதானி பிராப்பர்டீஸ் நிறுவனத்துக்கு அளிப்பதாக இறுதி செய்யப்பட்டிருக்கும் தகவலை மகாராஷ்டிர வீட்டு வசதித் துறை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
இதையும் படிக்க.. சென்னை புறநகர் ரயில் பயணிகள் கேட்டதும் தெற்கு ரயில்வே செய்ததும்!
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தேவேந்திர ஃபட்னவீஸ், தனது வசம் இருந்த வீட்டு வசதித் துறையை ஒப்படைப்பதற்கு முன்பு, கடைசியாக, அதானி குழுமத்துக்கு, தாராவி பகுதியை மறுமேம்பாடு செய்வதற்கு ரூ.5,069 கோடி மதிப்பிலான திட்டத்தை அதானி குழும நிறுவனத்துக்கு அளிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த திட்டம், மும்பையின் மிக முக்கியமான பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்த திட்டம், ஏற்கனவே, வேறொரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஷிண்டே - ஃபட்னவீஸ் தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
தகராறு காரணமாக அசல் டெண்டர் ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் மட்டுமே சாத்தியமான வெற்றியாளர் என்பதை உறுதிப்படுத்த டெண்டர் நிபந்தனைகளை மாற்ற ஷிண்டே-ஃபட்னாவிஸ் அரசானது மிக அற்புதமான கூத்துகளை நிகழ்த்திக்காட்டியது என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.