ஜார்க்கண்ட் மாநிலத்தில், பல் வலிக்கு, யூடியூப்பில் மருத்துவர் என ஒருவர் அளித்த சிகிச்சையைப் பின்பற்றிய 26 வயது இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யூடியூப்பில் ஒரு மருத்துவர், பல் வலிக்கு அரளி விதைகளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என்று கூற, அதனைக் கேட்டு நம்பிய மஹ்தோ, ஏராளமான அரளி விதைகளை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
கடந்த சனிக்கிழமையன்று, மஹ்தோ, உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியாகியிருக்கிறார். இது பற்றி அவரது தந்தை கூறுகையில், கடந்த வாரம் முதல் மஹ்தோவுக்கு பல் வலி அதிகமாக இருந்தது. அதிலிருந்து தப்பிக்க சிகிச்சை எடுப்பது குறித்து யூடிபூப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு மருத்துவர் அரளி விதைகளை சாப்பிடுமாறு கூற, அதிகப்படியான அரளி விதைகளை சாப்பிட்டதால் தன் மகனுக்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், அரளி விதை என்பது உயிருக்கு தீங்கானது. எனவே அதனை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.