யமுனையில் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால் நிவாரண முகாம்களில் தங்குமாறு தில்லி அமைச்சரவை அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான அவரின் டிவிட்டர் பதிவில்,
கடந்த வாரம் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தில்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மாநிலத்தின் பல சாலைகளை மூழ்கடித்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஹரியாணாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ததின் காரணமாக யமுனாவின் நீர் மட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரே இரவில் 206.1 மீட்டர் உயர்ந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், தில்லியில் உள்ள மக்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனாலும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டாம்.
நீர் மட்டம் ஆபத்து அளவிற்கு கீழே இறங்கிய பின்னர் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று இந்தியில் அவர் பதிவிட்டுள்ளார்.
தில்லியில் காலை 9 மணிக்கு 205.58 மீட்டராக இருந்த நீர்மட்டம் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 205.80 மீட்டராக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 207.49 மீட்டர் என்ற அளவிலிருந்த நிலையில், ஜூலை 12ஆம் தேதி 208 மீட்டரை கடந்தது, யமுனையில் தற்போதுவரை நீர் மட்டம் 205.33 மீட்டர் அபாய அளவிற்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.