கார்கில் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் 3 மாதங்களாக போர் நடைபெற்றது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் ஊடுருவிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்ற ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கார்கில் வெற்றி நாள்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கார்கில் விஜய் திவாஸ், இந்திய நாட்டின் துணிச்சலானவர்களின் வீரக் கதையை கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சிறப்புமிக்க நாளில், இதயபூர்வமாக அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா' என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.