மணிப்பூா் கலவரத்தின்போது பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பான விசாரணையை சிபிஐ கையிலெடுத்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவகாரம் தொடா்பாக மணிப்பூா் போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்), தங்களது வழக்காக சிபிஐ எடுத்துக்கொண்டுள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
மணிப்பூா் வன்முறை தொடா்பான 6 வழக்குகள் மீதான விசாரணையில் சிபிஐ ஏற்கெனவே பங்கேற்று விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக டிஐஜி அளவிலான அதிகாரி தலைமையில் சிபிஐ-யின் சிறப்பு புலனாய்வுக் குழு மணிப்பூரில் ஏற்கெனவே முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்கள் இருவா் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடியோ தொடா்பான வழக்கும் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மேலும் சில பெண் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணா்களையும் மணிப்பூருக்கு சிபிஐ அனுப்பவிருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.