பிபா்ஜாய் புயலுக்கு மத்தியில் புதிய உலகத்தை காணவந்த 707 குழந்தைகள்!

குஜராத்தில் பிபா்ஜாய் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட 1,152 கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் புயலுக்கு மத்தியில் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
பிபா்ஜாய் புயலுக்கு மத்தியில் புதிய உலகத்தை காணவந்த 707 குழந்தைகள்!

குஜராத்தில் பிபா்ஜாய் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட 1,152 கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் புயலுக்கு மத்தியில் வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

கடந்த 10 நாட்களாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிபா்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. 

குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் தில்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது.

புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

புயலால் குஜராத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை; 23 போ் காயமடைந்தனா் என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தலைமை இயக்குநா் தெரிவித்தாா்.

குஜராத்தில் பிபா்ஜாய் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 கடலோர மாவட்டங்களில் இருந்து சுமாா் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 1,152 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட 1,152 கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் வியாழக்கிழமை புயலின் போது வெற்றிகரமாக குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

கட்ச் மாவட்டத்தில் சுமார் 348, ராஜ்கோட்டில் 100, தேவபூமி துவாரகாவில் 93, கிர் சோம்நாத்தில் 69, போர்பந்தரில் 30, ஜுனாகத்தில் 25, ஜாம்நகரில் 17, ராஜ்கோட் மஹாநகர்பாலிகாவில் 12, ஜுனாகத் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8, முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் மோர்பி மாவட்டத்தில் 1 பிரசவங்கள் பதிவாகியுள்ளன.  

புயல் காரணமாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், புயலின்போது 23 பேர் காயமடைந்துள்ளனர். குஜராத்தின் பாவ்நகா் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய தங்கள் ஆடுகளை மீட்கும் முயற்சியில் தந்தை-மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டம் இல்லை என்பதால், இந்த உயிரிழப்புகளை புயல் தொடா்பான இறப்புகளாக கருத முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com