பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை பபிதா போகத் வலுவிழக்க செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன் இது தொடர்பாக நேற்று (ஜூன் 17) ட்விட்டரில் விடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த விடியோவில் சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன், மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆரம்பத்தில் கடிதம் எழுதியதே பாஜகவைச் சேர்ந்தவர்களான பபிதா போகத் மற்றும் தீரத் ராணா ஆகியோர் எனக் குறிப்பிட்டனர். அதன்பின் இந்த போராட்டம் அரசியல் கட்சியினரால் பயன்படுத்திக் கொள்ளப்படக் கூடாது எனவும் அவர்கள் அறிவுரை கூறியதாகவும் அவர்கள் கூறினர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தையும் சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் காட்டினர்.
இந்த நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தீரத் ராணா மற்றும் பபிதா போகத் ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்களை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சி செய்தது எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மல்யுத்த வீரர்கள் தற்போது பிரச்னையில் இருக்கிறோம். நாங்கள் கண்டிப்பாக பிரச்னையில் இருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் படைத்தவர்களால் நடத்தப்படும் கேலிக்கூத்துகளை நினைத்து சிரிக்க கூட முடியவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.