விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாபெரும் விளையாட்டு போட்டியில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் என அனைவரும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு இந்த மாபெரும் போட்டி நகர்ப்புறங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ராஜுவ் காந்தி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாபெரும் ஒலிம்பிக் போட்டி சர்வதேச ஒலிம்பிக் தினமான ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 50 லட்சம் பேரை பங்கேற்க வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 30%-ஆக அதிகரிக்க வாய்ப்பு!
இந்த மாபெரும் போட்டியின்போது ராஜஸ்தான் அரசு தங்களது சிறப்பான திட்டங்கள் குறித்தும் விளம்பரப்படுத்த உள்ளது. கபடி, டென்னிஸ், கோ-கோ, கைப்பந்து மற்றும் கால்பந்து போன்ற போட்டிகள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கயிறு இழுத்தல் போன்ற போட்டிகள் கிராமப்புறங்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. அதேபோல கூடைப்பந்து போன்ற போட்டிகள் நகர்ப்புறங்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. உலக அளவில் ஒரு போட்டிக்கு அதிக அளவில் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.