வெப்ப அலை காரணமாக பிகார், உத்தரபிர தேச மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் இன்னும் வாட்டி வருகிறது. பிகார், உத்தரபிர தேச உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெப்ப அலைக்கு பிகார், உத்தரபிர தேச மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் பலியாகியுள்ளனர்.
அதில் உத்தரபிர தேசத்தில் 54 பேரும் பிகாரில் 44 பேரும் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் போன்ற புகார்களுடன் பாலியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதவாது, பெரும்பாலான நோயாளிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால், நாங்கள் இப்போது ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம் என்றார். இந்திய வானிலை தரவுகளின்படி, பாலியாவில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 4.7 டிகிரி அதிகமாகும். இதேபோல் பிகாரில் மாநிலத்தில் குறைந்தபட்சம் 18 இடங்கள் கடுமையான வெப்ப அலையும், நான்கு இடங்கள் வெப்ப அலையும் காணப்பட்டது.