மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், சிவப்பு சிக்னலில் ரயில் நிற்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மீட்புப் பணிகளை முழுவதுமாக செய்து முடிக்க 8 மணிநேரம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடத்தில் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சிவப்பு சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதே ரயில் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்தது.
மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரயில், லூப் லைனில் சென்றதால் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.