தொடர் கனமழை காரணமாக ஹிமாசலப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
மணாலி - சண்டிகர் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், லாரி போன்ற கனரக வானங்களும், கார் வேன் போன்ற சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனங்களும் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஹிமாசலப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடர் மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மணாலி - சண்டிகர் செல்லும் நெடுஞ்சாலையில் அதிக அளவு மலைப்பகுதிகள் இருப்பதால், நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன நெரிசலில் சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களும் சிக்கியுள்ளன. அருகில் விடுதிகளும் கடைகளும் இல்லாததால், சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்த போக்குவரத்து நெரிசலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 200க்கும் அதிகமான சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.