

பெங்களூரு மைசூரு விரைவு சாலையில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்குத் தடை விதித்து தேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, விவசாயத்திற்காக பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை ஜூலை 3-வது வாரத்திலிருந்து அனுமதிக்கப்படாது என்றும் இதுதொடர்பாக 15 நாள்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவிலிருந்து மைசூருக்கு 90 நிமிடங்களில் பயணிக்க உதவும் தற்காலிக விரைவு போக்குவரத்து கடந்த மார்ச்சில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்த விரைவுச் சாலை திறக்கப்பட்டதும், இதில் பல்வேறு விபத்து நிகழ்ந்ததால் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த புதிய போக்குவரத்து அறிவிக்கப்பட்ட பின்பு மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்களும் இருப்பதால் இதுபோன்ற வாகனங்களை தடை செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை. மேலும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அவை தடை செய்யப்படுகிறது.
தில்லி- மீரட் மற்றும் தில்லி - வதோதரா விரைவுச் சாலைகளைப் போன்று பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தடை செய்யப்படும் என்று பெங்களூரு பிராந்திய அதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். மேலும் 10-15 நாள்களுக்குள் சாலை போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் மின்சார பேருந்து மற்றும் சரக்கு வாகனம் மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார். மேலும் பயணிகள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மடிகேரியிலிருந்து பேருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்ததால் இரண்டு வாகனங்களும் மோதியது. இதில் ஓட்டுநர் ரமேஷ்(51) பலியானார். இவர் 19 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.