புதுகை ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் வாயுக் கசிவு

புதுக்கோட்டையிலுள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை ஆவின் நிலையத்தில் வாயுக் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
புதுக்கோட்டை ஆவின் நிலையத்தில் வாயுக் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்.
Updated on
1 min read

புதுக்கோட்டையிலுள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆவின் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் எடுத்து வரப்படும் பால் இங்கு குளிரூட்டப்பட்டு, பொட்டலமிடப்பட்டு, புதுக்கோட்டை மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் இங்கு பணிகள் நடைபெற்று வந்தபோது, ஒரு அலகில் இருந்து திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. துர்நாற்றத்துடன் கண் எரிச்சலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அனைத்துப் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்த தீயணைப்புப் படையினர் ஆலையின் பகுதிகளில் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். உள்ளே வாயு கசிவு ஏற்பட்ட வால்வுகளை அடைத்தனர்.

அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதாகவும், சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அது சரி செய்யப்பட்டதாகவும், அந்த அலகைத் தவிர பிற அலகுகளில் பால் குளிரூட்டும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ஆவின் அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல, வழக்கமான பால் விநியோகத்திலும் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com