தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மதுபான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிண்ட்கோ சேல்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மதுபான தொழிலதிபர் அமந்தீப் தாலை அமலாக்கத்துறை(இடி) இன்று கைது செய்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தில்(பிஎம்எல்ஏ) விதிகளில் கீழ் தால் புதன்கிழமை இரவு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமையான இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
முன்னதாக, கலால் முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர், மனோஜ் ராய், அமந்தீப் தால் மற்றும் சமீர் மஹந்த்ரு ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுவரை, அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து தால் உள்பட மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.