
வகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெற நினைப்பதாக எதிர்க்கட்சிகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தாக்கிப் பேசியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமைதியை யார் என்ன நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக உட்பட பஞ்சாபில் உள்ள எதிர்க்கட்சிகள் பலவும் கடந்த மாதம் நடைபெற்ற அஜ்னாலா சம்பவத்தை விமர்சித்து தாக்கி வரும் நிலையில் பகவந்த் மான் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியதாவது: மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லாத பிரிவினை முயற்சியில் ஈடுபடுகின்றன. மக்களின் உணர்வுகளை பாதிக்கும் விதமாக செயல்படுவதன் மூலம் நெருப்புடன் அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகள் பஞ்சாபின் அமைதியை ஒரு போதும் பாதிக்காது. பஞ்சாபில் துறவிகள், குருக்கள், இஸ்லாம் மத குருக்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தின் அமைதியை அரசு பாதுகாக்கும் என்றார்.
பஞ்சாபில் கடந்த மாதம் அஜ்னாலாவில் சீக்கிய மத பரப்புரை செய்பவர் எனக் கூறிக்கொள்ளும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் வாள்களை ஏந்தி காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டு விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.