பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார்.
லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவில் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாகவும் பேசினார். இது தொடர்பாக உளவுத் துறை தன்னை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெகாசஸ் உளவு செயலி ராகுல் காந்தியின் தொலைபேசியில் இல்லை அவரது மனதில் தான் இருக்கிறது என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ராகுல் காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசியதாவது: பெகாசஸ் உளவு செயலி ராகுலின் தொலைபேசியில் இல்லை, அது அவரது மனதில் தான் இருக்கிறது. பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளது. நான் ராகுல் காந்தியின் அறிவுத் திறனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவர் வெளிநாடுகளுக்கு சென்று நமது இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியாவினை அவமதிக்கும் விதமாக காங்கிரஸ் நடந்து கொள்வது அவர்களின் புதிய திட்டம். இந்தியா குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விமர்சிப்பது தேசத்துக்கு எதிரானது. அதனால், இந்தியாவும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.