திரிபுரா முதல்வராகப் பதவியேற்ற மாணிக் சாஹாவுக்கும், அமைச்சர்கள் குழுவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அகர்தலாவில் சாஹா மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
திரிபுரா மாநிலத்தின் முதல்வராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டது மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகள்.
மக்கள் அளித்த ஆணையை மீண்டும் ஒருமுறை வழங்கி திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்க்கும். அவர்களின் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன.
தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக மாணிக் சாஹாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.