ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், ஐ.பி.எஸ் அதிகாரி ஜோதி யாதவுக்கும் இம்மாத இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளது.
ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் தொகுதியிலிருந்து முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரான பெயின்ஸ், தற்போது முதல்வர் பகவந்த் மான் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக உள்ளார்.
வழக்குரைஞராக உள்ள 32 வயதான பெயின்ஸ் ஆனந்த்பூர் சாஹிப்பில் உள்ள கம்பீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2017 தேர்தலில் சாஹ்னேவால் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மாநிலத்தில் ஆம் ஆத்மியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.
பஞ்சாபில் ஐபிஎஸ் அதிகாரியான யாதவ், தற்போது மான்சா மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியாணாவில் உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இம்மாத இறுதியில் திருமணம் நிகழ உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.