காங்கிரஸ் ஒரு முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சியாக மாறியுள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ விமர்சித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
அதில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், பஜ்ரங் தள அமைப்பு தடை செய்யப்படும் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா கூறுகையில்,
“காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பார்க்கையில், முழு இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியின் அறிக்கை போல் இருக்கிறது. ஜின்னா உயிருடன் இருந்திருந்தால்கூட இப்படி ஒரு அறிக்கையை தயாரித்திருக்க மாட்டார். இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது. பிஎஃப்ஐ அமைப்பை உள்துறை அமைச்சர் தடை செய்தார். தற்போது பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப் போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது” எனத் தெரிவித்தார்.