பஜ்ரங் தளத்தை தடை செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடக பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது. அதில், வெறுப்பைத் தூண்டும் பி.எஃப்.ஐ., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி, 'விஸ்வ இந்துவின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை.
எங்கள் தேர்தல் அறிக்கையில் பி.எப்.ஐ., பஜ்ரங் தளம் இரண்டையும் குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைத்து தீவிர அமைப்புகளும் அடங்கும். ஒரு அமைப்பை ஒரு மாநில அரசால் தடை செய்ய முடியாது. மத்திய அரசால் தான் தடை செய்ய முடியும். பஜ்ரங் தளத்தை கர்நாடக அரசால் தடை செய்ய முடியாது' என்று கூறியுள்ளார்.