திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல விரும்புவோர், ஆன்லைன் மூலம் டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஆனால், அவ்வாறு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சில அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரியாகக் கண்டறிந்து அதில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
அண்மையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மாற்றப்பட்டதால், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட சமூக விரோதிகள் சிலர், பழைய இணையதளத்தைப் போல போலி இணையதளத்தை உருவாக்கி பக்தர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிவந்த போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையதள பக்கத்தின் வடிவமைப்பை இந்த மாதம் புதிதாக மாற்றியுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, பழைய இணைய தள வடிவிலேயே போலி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருப்பதி திருமலை கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு என்ற பெயரில் மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இவ்வாறு போலி டிக்கெட்டுகளுடன் வந்த பக்தர்கள் மூலம் இந்த மோசடி வெளிஉலகுக்குத் தெரிய வந்தது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் பெயரில் இயங்கிவந்த போலி இணையதளம் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
தேவஸ்தானம் அளித்த புகாரில் இதுவரை 41 இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாம் முன்பதிவு செய்வது உண்மையான இணையதளம்தானா என்பதை பக்தர்கள் ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்துகொள்ள மறக்க வேண்டாம்.