நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12 மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உறுதியானத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேவேளையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் மே 11ஆம் தேதி வெளியிடப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை என்று ஒரு அறிக்கை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகள் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த அறிக்கை போலியானது என்றும், அவ்வாறு எந்த தேதியையும் சிபிஎஸ்இ இதுவரை உறுதி செய்யவில்லை என்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் ரமா ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு சுமார் 21.86 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வையும், 16.96 லட்சம் பேர் 12ஆம் வகுப்புத் தேர்வையும் எழுதியுள்ளனர்.
எனவே, சமூக ஊடகங்களில் தேர்வு முடிவுகள் குறித்து வெளியாகும் அறிக்கை போலியானது என்பதை மக்கள் உணர்ந்து, அதனை யாருக்கும் ஃபார்வேர்டு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
விரைவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும். இதுவரை அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்படவில்லை.