உத்தரப் பிரதேச மக்கள் நாள் ஒன்றுக்கு 115 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் அருந்துவதாக மாநில கலால் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜை தலைமையிடமாகக் கொண்ட மாநில கலால் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 2.5 கோடி முதல் 3 கோடி மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாகக் கூறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் ஒருநாள் மதுபான நுகர்வு 85 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ. 12 கோடி முதல் ரூ. 15 கோடி வரை மதுபானம் மற்றும் பீர் விற்பனையாவதாக கலால் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புள்ளிவிவரங்களின்படி, பிரயாக்ராஜில், ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 4.5 கோடி மதிப்புள்ள மதுபானம், பீர் விற்பனையாகிறது.
விற்பனை அதிகம் நடைபெறும் மாவட்டங்கள்(நாள் ஒன்றுக்கு): நொய்டா, காஸியாபாத் (ரூ.13- 14 கோடி), ஆக்ரா (ரூ. 12- 13 கோடி), மீரட் (ரூ.10 கோடி), லக்னெள(ரூ. 10 - 12 கோடி), கான்பூர் (ரூ. 8- 10 கோடி), வாராணசி (ரூ. 6- 8 கோடி).