வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள அதி தீவிர புயலான ‘மோக்கா’ புயல் நாளை நண்பகலில் கரையைக் கடக்கிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வியாழக்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் இரவு தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போா்ட் பிளேயரில் இருந்து சுமாா் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை (மே 14) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடற்கரையை 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (மே 16) வரை 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.