தில்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்!

தில்லி துவாரகா தெற்கில் உள்ள 4 மாடி வீட்டில் வெவ்வேறு தளங்களிலிருந்து இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி: தில்லி துவாரகா தெற்கில் உள்ள 4 மாடி வீட்டில் வெவ்வேறு தளங்களிலிருந்து இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். வீட்டின் தரைத்தளத்தில் இரவு பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற வீட்டில் 4 சகோதரர்களின் குடும்பத்தினர் தனித்தனி மாடிகளில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று முதல் மாடியில் வசித்து வந்த குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர்.

முதலில் மூன்றாவது தளத்திலும், பிறகு நான்காவது தளத்திலும் சிலிண்டர் வெடித்தது. இந்த வெடிப்பு காரணமாக வீட்டின் 3-வது மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் 4 தீயணைப்பு வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலிண்டர் வெடிப்பில் ராம் பரோஸ்(72), சத்ய நாராயண்(62), ராதே ஷ்யாம்(48) மற்றும் அவரது மனைவி சந்திரா(47) மற்றும் அனில்(43) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சத்ய நாராயண் மற்றும் ராதே ஷ்யாம் ஆகியோர் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ராம் பரோஸ், அனில், சந்திரா ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகே சரியான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com