பாரதிய ஜனதா கட்சியினர் ராம நாமத்தை வழிபடக்கூடியவர்கள் அல்ல, மாறாக அதனை வைத்து வியாபாரம் செய்யக்கூடியவர்கள் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பிரமோத் திவாரி பேசியதாவது: “ஜோதிராதித்ய சிந்தியா ஏன் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு சென்றார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை கொடுத்தோம். ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த முறை மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் எங்கள் அரசு அமைந்தது, ஆனால் இந்த முறை அவரைப் போல வேறு யாரேனும் துரோகம் செய்தாலும், ஆட்சியை இழக்காத அளவுக்கு அறுதி பெரும்பான்மை பெறுவோம்.
பாஜகவினர் ராமரை முன்னிறுத்துகின்றனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் ராமரை உண்மையாக வழிபடுபவர்கள் அல்ல, மாறாக ராம நாமத்தை வைத்து வியாபாரம் மட்டுமே செய்யக்கூடியவர்கள். மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவையில் முடிவு!
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.