ராஜ்கோட்: குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9ஆம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
சாக்ஷி ரஜோசரா என்ற பெண், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தனது பள்ளி வகுப்பறைக்குள் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். நினைவிழந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர்.
மரணத்துக்கான காரணம் அறிய, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் சிறார், சிறுமிகள் உள்பட பலரும் மாரடைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் நவராத்திரியின்போது 20க்கும் மேற்பட்டோர் கர்பா நடனத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாணவி மாரடைப்பால் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.