பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று (நவம்பர் 7) ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க பிகார் போலீசார் அவர்களின் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். மேலும் அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவமான ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். “ரூ. 5000-இல் யாரால் உயிர் வாழ முடியும்?, உரிமைகளைக் கேட்டால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறோம். எங்களுக்கான கௌரவமான ஊதிய உயர்வு வழங்காதவரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்” எனப் போராட்டக்காரர்கள் கூறினர்.
அங்கன்வாடி ஊழியர்களின் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
பாஜக தலைவர் ஷேஜாத் பூனாவல்லா, பிகார் அரசைக் கடுமையாக சாடினார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காட்டாட்சியாக இருந்த நிதிஷ் குமாரின் அரசு தற்போது தடியடி அரசாக மாறியுள்ளது. ஐக்கிய ஜனதா தள அரசில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் இப்படி கொடூரமாக ஒடுக்கப்படுகின்றன.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அங்கன்வாடி ஊழியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மாநில அரசிடம் தங்களுக்கு ஐந்து கோரிக்கைகள் இருப்பதாகவும், அவற்றில் ஊதிய உயர்வுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் அங்கன்வாடி ஊழியர்கள் கூறினர். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை பலன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பிகார் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.