நாட்டின் சொத்துகள் அனைத்தும் பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரியங்கா காந்தி பேசியதாவது, “சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும், அவர்களின் நலனுக்கான வரைவுக் கொள்கைகளை உருவாக்குவதற்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.
பிரதமர் மோடி தன்னை ஓபிசி பிரிவிலிருந்து வந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற எங்களின் கோரிக்கையை நிராகரிக்கின்றார். இந்தக் கோரிக்கையால் பாஜக தலைவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் ரமண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது வன்முறை, தவறான ஆட்சி, வறுமை மட்டுமே மாநிலம் முழுவதும் நிலவியது. காங்கிரஸ் அரசு கடந்த ஐந்தாண்டுகள் சத்தீஸ்கர் மக்களின் நலனுக்காக உழைத்தது. ஆனால் மத்திய அரசு என்ன செய்தது? மோடிக்காக தலா 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு விமானங்கள் வாங்கப்பட்டன. 20,000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது.
கரும்பு விவசாயிகள் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.15,000 கோடி நிலுவைத் தொகையைக் வழங்கக்கோரி வீதிகளில் இறங்கிப் போராடினர். நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் விமானங்கள் வாங்குவதற்கு மோடியிடம் பணம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பணம் இல்லை.
இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான வேலைகள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பாஜகவினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்களையும் அவர்கள் அழித்துள்ளனர்.
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி தவறான நடைமுறைப்படுத்தல் மூலம் சிறு வணிகங்களை அழித்த பாஜகவினர் நாட்டின் அனைத்து சொத்துகளையும் பெரும் தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று பேசினார்.