நகர்ப்புற உள்ளாட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாகாலாந்து சட்டப்பேரவையில் இன்று (நவம்.9) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து பேசிய நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, “நாகாலாந்து நகர்ப்புற மசோதா - 2023ல் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திலுள்ள பழங்குடியின அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடக்கம்தானே தவிர முடிவல்ல. மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் பெண்கள் பங்கேற்று செயலாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
நாகாலாந்தில் கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய நாகாலாந்து நகர்ப்புற உள்ளாட்சி மசோதா - 2023 உருவாக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் டி.ஆர்.செலியாங் தலைமையிலான ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு இந்த மசோதாவினை ஆய்வு செய்து, மேலும் சில ஷரத்துகளை இணைக்கப் பரிந்துரை செய்தது.” என்று கூறினார்.
இதையும் படிக்க: அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு
மேலும் பேசிய அவர், “நகர்மயமாக்கல் நடவடிக்கையை நமது மாநிலம் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் வேகமாக நகர்மயமாகி வருகிறோம்.. தற்போது நாகாலாந்து மாநிலத்தில் 39 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.” என்று குறிப்பிட்டார்.
நாகாலாந்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடைசியாக 2004-ஆம் ஆண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.