நவம்பர் 23-ஆம் தேதி கேரளாவின் கோழிக்கோட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி நடத்த உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் அறிவித்துள்ளார்.
இந்த ஒற்றுமைப் பேரணியை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், “கோழிக்கோடு மதச்சார்பற்ற ஜனநாயக சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் நவம்.23-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோழிக்கோடு கடற்கரையில் ஒருங்கிணைவார்கள். பாலஸ்தீன ஆதரவு குறித்த வரலாற்றுப் பேரணியாக இது அமையும்.
பாலஸ்தீனர்கள் அவர்களின் சொந்த நாட்டில் வசிக்கும் உரிமையை மறுக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது.
அப்பாவி பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான காங்கிரஸ் அரசுகள், கண்ணியத்துடன் அமைதியாக வாழ்வதற்காக பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் போராட்டங்களை ஆதரித்து வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் பேரணி நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!
ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்ட மோடி அரசின் நடவடிக்கை இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக கொள்கைக்கு எதிரானதாகும்.” என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, நவம்.11-ஆம் தேதி கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.