உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 15 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராஜ்பூர் சாலையிலுள்ள நகைக்கடை ஒன்றில், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகல் நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
'கடந்த வியாழக்கிழமை காலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிகளுடன் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு வேலை செய்பவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களில் இரண்டு பேரை வெளியே பாதுகாப்பிற்கு நிற்க வைத்துக்கொண்டு மற்றவர்கள் கடைக்குள் நகைகளைத் தங்கள் பைகளில் நிரப்பிக்கொண்டார்கள்' என மூத்தக் காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறினார்.
மேலும், மாநிலத்தின் 23 ஆவது நிறுவனநாள் விழாவிற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட வேளையில் இந்த துணிச்சலான திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதாகக் கூறினார்.
மேலும், காவல்துறையினர் நான்கு குழுக்களாகப் பிரிந்து குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், குற்றவாளிகள் பயன்படுத்திய இரண்டு பைக்குகள் நகரின் சஹாஸ்புர் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சிசிடிவி பதிவுகளைக்கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை தடவியல் நிபுனர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி திருடர்களை விரைவில் பிடிக்க வலியிறுத்தியுள்ளார்.