நாட்டில் ஊழல்களின் தலைநகரமாக மத்தியப் பிரதேசம் மாறியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹர்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்
மத்தியப் பிரதேசத்தில் பாஜக அரசு 50 சதவிகித லஞ்சம் பெற்று அனைத்து வேலைகளையும் செய்கிறது மற்றும் எல்லாவற்றிலும் ஊழலில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
"அச்சமின்றி, வெளிப்படையாக விடியோ அழைப்பில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனும், இடைத்தரகர் ஒருவரும் பேசும் விடியோவை பார்த்து இருப்பீர்கள். மோடிஜி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்ததா?,'' எனக் கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சரின் மகனின் இந்த விடியோ போலியானது என்றும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் 18,000 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றார்.
தொழிலதிபர்களின் நலனுக்காக பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டது, இதில் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் நாட்டின் சாதாரண குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ள நல்ல நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், தனது கட்சி ஆட்சி அமைத்த பிறகு ம.பி.யிலும் இவை செயல்படுத்தப்படும் என்றார்.
இதையும் படிக்க: தில்லியில் துப்பாக்கிச் சூடு - தாய், மகள் காயம்!
ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், ரூ.2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம், கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.