பாஜக ஆட்சியில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது: ராஜ்நாத் சிங்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த ஒன்பதரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவின் மீதான பார்வை மாறியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் இன்று (நவம்.14) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “முன்பு இந்தியா வலிமையற்ற நாடாகவும், வறுமை மிக்க நாடாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் இந்தப் பார்வை மாறியுள்ளது.

முன்பெல்லாம் சர்வதேச அரங்குகளில் இந்தியா தெரிவிக்கும் கருத்துகளுக்கு அதிக கவனமளிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் பேச்சு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் இந்தியா முன்னேறியுள்ளது. உலக அளவில் 11-ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-ஆம் இடத்திற்கு வந்துள்ளது. இந்தியா தற்போது வலிமைமிக்க நாடாக பார்க்கப்படுகிறது” என்று  பேசினார். 

மேலும் காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். 

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்.17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 109 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது. அதன்பின் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு ஆதரவளித்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com