பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இரண்டு கடன் வசூல் முகவர்கள் கைது செய்யப்பட்டனர்.
34 வயது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அஸ்ஸாமைச் சேர்ந்த இரண்டு கடன் வசூல் முகவர்கள் தாணே ரயில்வே காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
லக்ஷனா நரேந்திர யாதவ் என்ற பெண் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மகாராஷ்டிராவின் தாணே மாவட்டத்தில் உள்ள திவா ரயில்வே நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அவர் இணையவழியில் ரூ.19,000 கடன் வாங்கியிருந்ததாகவும், கடன் வழங்கியிருந்த நிறுவனத்தைச் சேர்ந்த கடன் வசூல் முகவர்கள் அந்த பெண்ணை துன்புறுத்தியதாகவும் தெரியவந்தது.
அந்தப் பெண்ணுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர் என்று ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் குறித்த விசாரணையில் இறங்கினர்.
இதையும் படிக்க: ரயில் பயணங்களில் 95% போ் ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்
இந்நிலையில் அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சங்கர் நாராயண் ஹஜோங் மற்றும் பிரசன்ஜித் நிர்பேன் ஹஜோங் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
அதனையடுத்து அவர்கள் இருவரும் தற்போது ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.