வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.
பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான 'ரிஸ்க் வெயிட்டேஜ்' 25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 125 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் மற்றும் தங்க நகைகளுக்கான கடன்களுக்கு 100 சதவீத புள்ளிகளே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ரிஸ்க் வெயிட்டேஜ் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் கட்டுப்படுத்தப்படும். பாதுகாப்புடன் கடன் வழங்க அறிவுறுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி இந்நடவடிக்கையை எடுத்துளளது.
கடன் அட்டைகளின் மீதான ரிஸ்க் வெயிட்டேஜும் 25 சதவீத புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 150 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராணுவங்களிடையே மீண்டும் தகவல்தொடா்பு: பைடன்-ஜின்பிங் ஒப்புதல்
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நுகர்வோர் கடன் பிரிவில் சில உட்பிரிவுகளில் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, வங்கிகள் கண்காணிப்பு நெறிமுறைகளை அதிகரித்து, பாதுகாப்பற்ற கடன்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய வங்கிகளின் சிஇஓ-க்களுடன் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நுகர்வோர் கடன்களின் அதிக வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏற்கனவே பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.