கோழிக்கோடு மாவட்டத்தில் குடிபோதையில் காவல் நிலையத்தைத் தாக்கிய மூன்று பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (நவம்.16) இரவு பேருந்து நிறுத்தத்தில் ரகளை செய்த கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பாலுச்சேரி காவல் நிலையத்தின் மீது நேற்று இரவு அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து நிதின், பாபினேஷ் மற்றும் ராபின் பேபி ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
பேருந்து நிறுத்தத்தில் தகராறு செய்ததாக மூன்று நபர்களின் மீது வெள்ளிக்கிழமை காலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்பு அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஷமியால் ஆனது: இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
மேலும், பணியில் இருந்த காவலர்களையும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரின் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களை நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.