மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா சென்றிருந்தார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நவ.16-ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபின்பு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
அதனையடுத்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
1945-ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்த நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஷமியால் ஆனது: இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் அடையாளம் தெரியாத வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலிகள்” என்று தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான சீனிவாசப் பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.