போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஜான்சி சாலை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கும் போது தாதியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டார். மாணவி தனது சகோதரருடன் வந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பேருந்திலிருந்து இறங்கிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக பைக்கில் அமற வைத்து தப்பித்து சென்றனர். இந்த கடத்தல் சம்பவமானது கண்காணிப்பு கேமராக்களில் முழுவதுமாக பதிவாகியுள்ளது.
காலை 9:30 மணியளவில் சந்திரவத்னி நாகாவின் பெட்ரோல் பங்கில் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜான்சி சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடத்தல்காரர்கள் சென்ற பாதையை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
19 வயதான பிராச்சி வியாஸ், தாதியாவில் உள்ள பாரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது மாமாவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குவாலியருக்கு பேருந்து மூலம் வந்து உள்ளார். ஜான்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்து இறங்கியபோது இரண்டு வாலிபர்கள் பிராச்சியை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிகொண்டு தப்பித்து சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.