உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விபத்து நடைபெற்ற சில்க்யாரா பகுதிக்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
சில்க்யாரா சுரங்கத்தில் 51 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க இன்னும் 5 மீட்டர் துளையிட வேண்டியுள்ள நிலையில், இன்று அனைவரும் கட்டாயம் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் அனைவரையும் மீட்கும் பணி இன்று நிறைவடையும் என அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டுவந்த இருவழி சுரங்கத்தில், கடந்த 12-ஆம் நிலச்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில், 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க கனரக இயந்திரத்தின் உதவியுடன் கிடைமட்டமாகத் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு 800 மி.மீ குழாய் மூலம் ஆக்சிஜன், உணவு, உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை நிலவரப்படி 45 மீட்டருக்கு துளையிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்னும் 5 மீட்டர் தூரத்துக்கு துளையிட வேண்டியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி சில்க்யாரா பகுதிக்கு விரைந்துள்ளார். அங்கு மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு, விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறியவுள்ளார்.